சனி, 27 ஆகஸ்ட், 2016

சேக்கிழார் நாயனார் வரலாறு

சேக்கிழார் நாயனார் வரலாறு
பன்னிரண்டாம் திருமுறை அருளிச்செய்த 

சேக்கிழார் நாயனார் வரலாறு

" தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் 
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் " எனப் போற்றப்படுபவர் அருண் மொழித்தேவர்  என்ற சேக்கிழார் பிரான்

சேக்கிழாரின் தோற்றம்:

தொண்டைவள நாட்டில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் குன்றைவள நாட்டின் தலைநகராக விளங்கியது குன்றத்தூர்.குன்றத்தூரில், சோழ மன்னன் கரிகாலனால் குடியேற்றப்பட்ட கூடல்கிழான், புரிசைகிழான் போன்ற வேளாளர் குடும்பங்களில் சேக் கிழார் குடியும் ஒன்றாகும். சோழமன்னர்களால் நன்கு மதிக்கப்பட்ட இக்குடியில், அருண்மொழித்தேவரும் அவரது தம்பியார் பாலறாவா யரும் தோன்றினார்கள். பெற்றோர் தம்பிள்ளைகட்கு இராஜசோழ னின் இளமைப் பெயராகிய அருண்மொழித்தேவர் என்ற பெயரை யும், ஞானசம்பந்தரின் திருப்பெயராகிய பாலறாவாயர் என்ற பெய ரையும் வைத்துள்ளமை அவர்கட்கு இராஜராஜன் மீதும் ஞானசம்பந் தர் மீதும் கொண்டிருந்த பத்திமையை வெளிப்படுத்தும்.

சேக்கிழாருக்கு அவர்தம் பெற்றோர் வைத்த பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த கார ணத்தால் அவர் சேக்கிழார் எனவே வழங்கப்பெற்றார்.
அமைச்சுரிமை ஏற்றல்:



அருண்மொழித்தேவரும் பாலறாவாயரும் இளமையில் கல்வி நலம் பெற்றுச் சிறந்தனர். பக்தி உணர்வுடன் நல்லொழுக்கத்திலும் மேம்பட்டு விளங்கினர். அக்காலத்தில் ஆட்சி புரிந்த சோழமன்னன், அருண்மொழித்தேவரின் சிறப்பியல்புகளால் கவரப்பெற்று அவரைத் தன் அமைச்சர்களின் தலைமை அமைச்சராக நியமித்து, `உத்தம சோழப்பல்லவன்` என்ற பட்டம் வழங்கி ஆட்சி உரிமைகள் பலவற்றை யும் அவருக்கு அளித்தான்.

அமைச்சுரிமை ஏற்ற அருண்மொழித்தேவர் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் தங்கி, அங்கு விளங்கும் திருநாகேச் சரத்து இறைவனிடம் பேரன்புகொண்டவராய் நாடோறும் `மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி` வழிபட்டு வந்தார். நாகேச்சரத்து இறைவர்பால் வைத்த பேரன்பினால் சோழநாட்டுத் திருநாகேச்சரம் திருக்கோயிலைப் போலவே தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலும் திருநாகேச்சரம் என்ற பெயரால் ஒரு திருக்கோயில் கட்டுவித்து அங்கு நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் இனிதே நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

அரசர்க்கு அறவுரை:



அந்நாளில் சைவம் சார்ந்த அன்பர்கள் பலரும் தங்கள் சமய மெய்நூல்களைப் பயிலாது சமணர்கள் புனைந்துரைத்ததும் சிற்றின்பச் சுவை மிகுந்ததும் ஆகிய சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி, அக்காவியச் சுவையில் ஈடுபட்டு, தம் சமயப்பெரியோர்களின் வரலாறுகளை அறியாது, பொழுது கழித்து வந்தனர். சோழமன்னனும் சிந்தாமணிக் கதையைச் சுவைபடக் கேட்டு, மனமகிழ்ந்து பாராட்டிக் களிப்புற்று வந்தான். 

அது கண்ட அருண்மொழித்தேவராம் சேக்கிழார், அரசனை நோக்கி `வேந்தர் பெருமானே, தாங்கள் சைவமெய்ச் சமயத்தைச் சார்ந்தவராயிருந்தும் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங் களையும் தரும் சிவனடியார்களின் மெய்மை வரலாறுகளைக் கேளாது சமணர்கள் புனைந்துரைத்த பொய்க்கதையாகிய சிந்தா மணிக் கதையை மெய்யெனக் கருதிக் கேட்டல் தகுதியுடையதன்று என இடித்துரை கூறினார்.

அமைச்சரின் அறிவுரையைக் கேட்ட மன்னன், `நீவிர் கூறும் சிவகதை யாது? அதனை விளங்க உரைப்பீராக` எனக் கேட்டனன். 

சேக்கிழார் அரசனை நோக்கி, `திருவாரூரில் விளங்கும் தியாகேசப் பெருமான் தம்முடைய அடியார்களின் பெருமைகளை விரித்துரைத்துப் போற்றுக எனக் கூறி, `தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` எனத் தாமே அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்னும் திருப் பதிகத்தால் சிவனடியார்களின் பெருமைகளைப் புகழ்ந்துப் போற்றி னார். அத் திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூரில் விளங்கும் பொல்லாப் பிள்ளையார் அருள்பெற்று அவர் உணர்த்திய வகையில் அத்திருத்தொண்டத் தொகையில் குறிப்பால் உணர்த்திய வரலாறு களைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்றதொரு நூலை அருளிச் செய்துள்ளார். 

இவ்வரலாறு களைக் கேட்ட இராஜராஜமன்னர், சிவாலய தேவர் முதலாகவுள்ள அனைவரும் கேட்டு மகிழ்ந்து இவைகளே மெய்நூல்கள் எனப் பாராட்டியுள்ளார்கள்` எனக் கூறினார்.
திருத்தொண்டர் புராணம் அருளல்:



மன்னன் வேண்டுகோளை ஏற்ற சேக்கிழார், நடராசப் பெரு மான் அருள்துணையோடு அதனை நிறைவேற்ற முற்பட்டு தில்லை யம்பதியை அடைந்து. சிவகங்கையில் நீராடி, அம்பலவாணரைத் தொழுது, சிவபெருமான்பால் அன்புமிக்க அடியவர் வரலாறுகளை விரித்துரைக்க அடியெடுத்துக் கொடுத்தருளுமாறு நடராசப் பெரு மானை வேண்டி நின்றார். அந்நிலையில் அங்குள்ளார் யாவரும் கேட்க, `உலகெலாம்` என்றொரு வானொலி எழுந்தது. சேக்கிழார் நடராசப் பெருமானின் தடங்கருணையை வியந்து நின்றார்.

தில்லை வாழந்தணர்கள் நடராசப் பெருமானின் பிரசாதமாகத் திருநீறு, திருமாலை, பரிவட்டம் அளித்தனர். 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரை யும் சேக்கிழார் வணங்கிப் போற்றி, ஆயிரங் கால் மண்டபத்தை அடைந்து, ஆங்கே அமர்ந்து, தில்லைப் பெருமான் அருளிய `உலகெ லாம்` என்ற சொல்லையே முதன் மொழியாகக் கொண்டு திருத்தொண் டர் புராணம் என்னும் தெய்வத் தமிழ்ப் பெருங்காவியத்தைப் பாடத் தொடங்கினார். இறைவன் அருளிய அவ்வருள்வாக்கு நூலின் முதலி லும் இடையிலும் முடிவிலும் அமையுமாறு அப்புராணத்தை இலக் கியச் சுவையும் பக்திச் சுவையும் இனிதே அமையப் பாடி முடித்தார்.

புராணம் எந்த அளவில் பாடப்பெற்றுள்ளது என்பதை அடிக்கடி விசாரித்து அறிந்துவந்த சோழமன்னன் திருத்தொண்டர் புராணம் பாடி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்து, மிக்க மனமகிழ் வெய்தி தில்லைப்பதியை அடைந்தான். சேக்கிழாரும் தில்லைவாழந் தணர்களும் எதிர் கொண்டழைத்தனர். மன்னன் தில்லையம்பலவனை யும், சிவவேடப் பொலிவுடன் விளங்கிய சேக்கிழாரையும் வணங்கி வலம்வந்து, தில்லையம்பல முன்றிலில் நின்றான். அந்நிலையில் `வளவனே! நாமே உலகெலாம் என அடியெடுத்துக்கொடுக்க, அன்பன் சேக்கிழான் அடியவர் திறத்தை விரித்து நூலாகச் செய்துள் ளான். 

திருவாதிரைத் திருநாள்:



நடராசப்பெருமானுக்கு உகந்ததும், திருஞானசம்பந்தர் திருவ வதாரம் செய்ததும், அவருக்கு உமையம்மை ஞானப்பால் அளித்ததும் ஆகிய பெருமைகளை உடையது திருவாதிரை. இது கருதியே சேக்கிழார் பெருமான் தில்லையில் சித்திரைத் திருவாதிரையில் தொடங்கிச் சித்திரைத் திருவாதிரையிலேயே திருத்தொண்டர் புராணத்தை முற்றுவித்தார். 

ஆதலின் திருக்கயிலையில் தொடங்கி, திருக்கயிலையில் நிறை வெய்துமாறு, திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைத் தொகை, வகை நூல்களாகக் கொண்டு பதின்மூன்று சருக்கங்களோடு 4286 பாடல்களாக அமைக்கப்பெற்ற திருத்தொண்டர் புராண விரிவுரையும் சித்திரைத் திருவாதிரையிலேயே தொடங்கப் பெற்றுச் சித்திரைத் திருவாதிரையிலேயே முற்றுவிக்கப்பட்டது. இருந்து கேட்ட மன்னரும் மக்களும் இன்பக்கடலில் திளைத்தனர். பெரியபுராணம் தில்லையில் அரங்கேற்றிய நாள் 20. 4. 1140 என்பர் ஆய்வறிஞர் குடந்தை நா. சேதுராமன்.

முத்திப் பேறு:

தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக