சனி, 5 ஜூலை, 2014


சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது. இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. மேலும் மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிக்கின்றது. இவைபோன்று இன்னும் எக்கச்சக்கமான சிதம்பர ரகசியங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை. அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும். இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும். அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம். இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும். இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும் ஸ்தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் அறியப்படுகிறது. பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில், சரியாக 79 டிகிரி, 41 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. இன்று கூகுள் மேப் உதவியுடன் வானத்தின் மேலிருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே இந்த துல்லியம் விளங்கும். அனால் இது அன்றைக்கே கணிக்கப்பட்டது பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். மூலவர் ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இவ்வாலயத்தில் நடனமாடும் நிலையில் காட்சி தருகிறார். இதன் காரணமாகவே பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராஜரை வணங்குகின்றனர். பாதாளத்தில் கருவறை??!! நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோயிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் பிரிக்கப்பட்ட அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது. அதாவது கோயிலின் கருவறை அமைப்பு தரைமட்டத்திற்கு கீழே பாதாளவெளியில் வீற்றிருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பொன் கூரை நடராஜர் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது. ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. பொன்னம்பலம் பொற்கூரை வேயப்பட்ட கனகசபை, பொன்னம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளதுடன், இது 64 கலைகளை குறிக்கின்றது. பிரகாரங்கள் மனிதரின் உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதன் இதயமும், கோயில் மூலவரும்! மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாமல் இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. சுவாசமும், ஓடுகளும்! ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். எனவே கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. நரம்புகளும், ஆணிகளும்! மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல கருவறைக்கூரையில் 72,000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. சாஸ்திரங்களும், புராணங்களும்! அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது நடராஜன் ஆன நடனராஜன்!!! நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜன் என ஆனதாக சொல்லப்படுகிறது. நாட்டியாஞ்சலி சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. அப்போது உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நடனக்கலைஞர்களும், நாட்டியம் பயிலும் மாணவர்களும் நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணமாக செலுத்துகின்றனர். இவ்வாறு நாட்டியார்ப்பணம் செய்வதை பெருமையாகவும், பேராகாவும் கருதுகின்றனர். நந்தவனம் வெளிவாசலை கடந்தவுடன் முதல் பிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி கோட்டைசுவர் அமைப்பினால் நாற்புறமும் சூழப்பட்டு இடம்பெற்றுள்ளது. கோயில் வளாகத்தின் முதல் அங்கமான இந்த நந்தவனப்பகுதி ஒரு வனம் போன்று அமைந்துள்ளது. கருங்கற்கள் பதிக்கப்பட்ட பிரகாரம் நந்தவனப்பகுதியை அடுத்து ராஜகோபுர வாசல் வழியாக உள் நுழைந்தபின் கருங்கற்கள் பதிக்கப்பட்ட அடுத்த பிரகார வளாகப்பகுதி காணப்படுகிறது. இந்தப் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோயில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் போன்றவை அமைந்துள்ளன நடைக்கூடம் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதிற்சுவரையொட்டியே காணப்படுகிறது. கலைநயம் மிளிரும் இந்த நடைக்கூடம் அவ்வளவாக கவனிக்கப்படாது இருந்தாலும் இது கோயிலின் நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்புக்கான சான்றாய் தோற்றமளிக்கின்றது. தீர்த்தங்கள் சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் கோயிலில் அமைந்துள்ளன. சிவகங்கை தீர்த்தம் கோயிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது. மேலிருந்து ஒரே சீராக படிகள் குளத்தின் அடிப்பகுதியை நோக்கி இறங்குவதைக்காணலாம். குளத்தின் அடிப்பகுதி ஒன்பது கிணறுகளுடன் முடிவடைதாக சொல்லப்படுகிறது. கல்வெட்டுகள் பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர் என்பதை இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. சிவகாம சுந்தரி அம்மன் கோயில் கோயிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகேயுள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோயில் ஒரு தனியான கோயில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது. சபைகள் பேரம்பலம், சிற்றம்பலம், கனகசபை, நிருத்தசபை, இராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. இவற்றில் பேரம்பலம் என்பது தேவசபை என்ற பெயரில் அறியப்படுகிறது. உற்சவ மூர்த்தியின் வாயில் கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பு உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது. பெயர்கள் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில், சிதம்பரம் கோயில் என்று நடராஜர் கோயில் அழைக்கப்படுகிறது. இது சைவ இலக்கியங்களில் 'கோயில்' என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பூலோக கைலாயம் என்றும் கைலாயம் என்றும் நடராஜர் கோயில் அறியப்படுகிறது. கோயில் வீதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு முன்னாலுள்ள வீதியில் பஜனை கோஷ்டி சிதம்பரம் கோயில் வீதிகளில் செல்லும் பஜனை பாடிச் செல்பவர்கள் அனுதினமும் காணலாம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக