சனி, 23 ஏப்ரல், 2016

பாட்டி வைத்தியம் பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்சிலை!


பாட்டி வைத்தியம்
பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்சிலை!


மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை, துளசியைப் போன்றே தெய்வீக தாவரமாகும். பூக்களுக்கு மணம் உண்டு, அதேபோல சில இலைகளும் நறுமணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்பு பெற்றது திருநீற்றுப்பச்சிலை.

உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. நறுமணம் வீசும் இந்த செடியின் இலைகளை அரைத்து பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும். இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும். திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.

தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது, அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இந்த இலைச்சாற்றின் சில சொட்டுகளை விட்டால் நிவாரணம் கிடைக்கும். இதன் இலையை முகர்ந்து பார்த்தாலே மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து பூசினால் பலன் கிடைக்கும். குழந்தை உண்டான பெண்கள், பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவ கால வலி விலகும். அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.


வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!


வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.

நன்றி ; விகடன் மற்றும் க்ஷெல்த் டிப்ஸ
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக